vendredi 23 décembre 2016

முற்று மோனை

வெண்பா மேடை - 32
    
முற்று மோனை வெண்பா!
  
மார்கழி மங்கையின் மாண்புரைக்கும் மாக்கோலம்!
கார்விழி காட்டும் கவிக்கோலம்! - கார்வண்ணா!
பாடும் பசுந்தமிழைப் பாலாகப் பாய்ச்சிடுவாய்!
ஈடும் இலையென்[று] எனக்கு!
  
நாற்சீரடியில் நான்கு சீர்களிலும் மோனை அமைந்திருப்பது முற்று மோனை.
[கண்ணா! கருணைக் கடலே! காப்பாய்]
  
நாற்சீரடியில் முதல் இரண்டு சீர்களில் மோனை அமைந்திருப்பது இணைமோனை.
[கண்ணா! கருணைச் செல்வா! வாவா]
  
நாற்சீரடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைந்திருப்பது பொழிப்புமோனை.
[கண்ணா! உன்போல் காப்பார் யாரோ]
  
நாற்சீரடியில் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் மோனை அமைந்திருப்பது ஒரூஉ மோனை.
[கண்ணா! என்றும் என்னைக் காப்பாய்]
  
நாற்சீரடியில் முதல் மூன்று சீர்களில் மோனை அமைந்திருப்பது கூழைமோனை.
[கண்ணா! கருணைக் கடலே! வா!வா]
  
நாற்சீரடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் நான்காம் சீரிலும் மோனை அமைந்திருப்பது மேற்கதுவாய் மோனை.
[கண்ணா! உன்றன் கழல்களைக் காட்டு]
  
நாற்சீரடியில் முதல் சீரிலும் இரண்டாம் சீரிலும் நான்காம் சீரிலும் மோனை அமைந்திருப்பது கீழ்க்கதுவாய் மோனை.
[கண்ணா! காலம் எல்லாம் காப்பாய்]
  
முதல் மூன்றடிகள் முற்று மோனை பெற்றும், ஈற்றடி கூழைமோனை பெற்றும் அமைந்த வெண்பா ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!
   
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
13.12.2016

Aucun commentaire:

Enregistrer un commentaire