lundi 24 avril 2017

கவியரசர் - பகுதி 1

கவியரசு கண்ணதாசன் விழா கவியரங்கம்
[தலைமைக் கவிதை]
  
திருமால் வணக்கம்!
  
கண்ணா! உன்றன் தாள்தொழுது
   கவிதைக் கதவைத் திறக்கின்றேன்!
வண்ணான் போன்றே இவ்வுலகின்
   மாசை அகற்ற அருள்தருவாய்!
தண்ணீர் மீது படுத்தவனே!
   தமிழின் மீது தவழ்ந்திடுவாய்!
கண்ணீர் மல்கி வேண்டுகிறேன்
   விண்ணீர் போன்றே தமிழ்பொழிவாய்!
  
தமிழ்த்தாய் வணக்கம்

வண்ணத் தமிழே! வானமுதே!
   வடிவாய் மின்னும் பேரழகே!
மண்ணில் பிறந்த முதன்மொழியே!
   மணக்கும் மலரே! மதுக்கனியே!
கண்ண தாசன் புகழ்பாடக்
   கவிஞன் உன்னை அழைக்கின்றேன்!
எண்ணம் மணக்கும் எழுத்துகளை
   என்..நா அமர்ந்து பொழிவாயே!
  
அவையோர் வணக்கம்

சந்தம் கொஞ்சும் தமிழ்நாடித்
   தஞ்சம் புகுந்த பெரியோரே!
பந்தம் கொஞ்சும் பைந்தமிழைப்
   பருகப் புகந்த பாவையரே!
முந்தும் பற்றால் முத்தமிழை
   மொழிய புகுந்த சான்றோரே!
உந்தும் அன்பால் என்னெஞ்சம்
   உரைக்கும் வணக்கம் ஏற்பீரே!
  
முன்னிலை வணக்கம்!
முன்னிலையை ஏற்றுள்ள என்றன் நண்பர்
   மூளைக்குள் திரைப்பாடல் யாவும் மின்னும்!
தன்னிலையை வளர்கின்ற காலந் தன்னில்
   தமிழ்நிலையை வளர்த்திடவே வாழு கின்றார்!
என்னிலையை நன்குணர்ந்தார்! என்றன் தோள்போல்
   இருந்தென்றும் செயலாற்றும் அன்பே கொண்டார்!
பொன்னிலையை இம்மன்றம் காண வேண்டிப்
   பொறுப்போடு தொண்டாற்றும் சிவனார் வாழ்க!
  
கவியரசர் புகழ்!
  
கண்ண தாசன் கவிதை தாசன்
காதல் தாசனடி!
எண்ணம் யாவும் இனிமை ஏந்தி
இசைத்த நேசனடி!
  
திருமால் அடியைத் தினமும் பாடித்
திளைத்த நெஞ்சனடி!
அரும்பால் அமுதை அவனின் பாக்கள்
அளித்து விஞ்சுமடி!
  
கங்கைக் கரையின் கண்ணன் அடியைக்
கண்டு களித்தாண்டி!
தங்கை அண்ணன் அன்பைப் பாடித்
தமிழில் குளித்தாண்டி!
  
புல்லாங் குழலின் புகழைப் போற்றிப்
புவியில் நிலைத்தாண்டி!
எல்லாம் அவனின் இயக்கம் என்றே
ஏற்றம் விளைத்தாண்டி!
  
கம்பன் தமிழில் காதல் கொண்டு
கவிதை புனைந்தாண்டி!
செம்பொன் இராமன் சீதை அடியைத்
தேடி இணைந்தாண்டி!
  
சீதை யழகில் சிந்தை மயங்கிப்
போதை அடைந்தாண்டி!
பாதை யாவும் பரமன் என்றே
பாடிப் பணிந்தாண்டி!
  
காட்டின் அரிமா காணும் ஆட்சி
கதைகள் சொல்லுமடி!
பாட்டின் அரிமா படைத்த பாக்கள்
பாரை வெல்லுமடி!
  
அண்ணன் என்ன? தம்பி என்ன?
கண்ணீர் வடித்தாண்டி!
மண்ணில் உள்ள மடமை கண்டு
வாடித் துடித்தாண்டி!
  
மேடை மணக்கும் மென்மைத் தமிழில்
விந்தை மொழிந்தாண்டி!
ஆடை மணக்கும் அருமைப் பெண்ணின்
அழகைப் பொழிந்தாண்டி!
  
கன்னல் தமிழைக் காத்தே நாளும்
கடமை புரிந்தாண்டி!
இன்னல் பட்ட இடத்தை எல்லாம்
எழுதிக் குவித்தாண்டி!
  
நாட்டின் நிலையை நன்றே பாடி
நன்மை பகன்றாண்டி!
காட்டின் மணமாய்க் கவிகள் தீட்டிக்
கடமை புகன்றாண்டி!
  
மாற்றம் ஒன்றே மாறா தென்று
மாறிக் குதித்தாண்டி!
ஆற்றின் நடையில் அடிகள் பாடிப்
அறிவைப் பதித்தாண்டி!
  
ஞாலம் வெல்லும் கோலத் தமிழை
நன்றே தீட்டியவன்!
காலம் வெல்லும் கவிதை பாடிக்
காதல் மூட்டியவன்!
  
விண்மின் நடுவே வெண்மை நிலவாய்
மேவி மின்னியவன்!
மண்மீ[து] எங்கும் வண்ணத் தமிழை
வளமாய்ப் பின்னியவன்!
  
தனக்குத் தானே இரங்கல் பாடித்
தந்த கவியரசன்!
இனத்தின் நெஞ்சை என்றும் ஆளும்
ஈடில் புவியரசன்!
  
மனத்தின் வாசம் வனத்தின் வாசம்
வரைந்த கவியரசன்!
இனத்தின் வாசம் இசையின் வாசம்
ஈந்த புவியரசன்!
  
பணத்தின் வாசம் பழியாம் வாசம்
பற்றாக் கவியரசன்!
குணத்தின் வாசம் கோயில் வாசம்
கொண்ட மொழியரசன்!
  
மதுவின் வாசம் மலரின் வாசம்
மகிழ்ந்த கவியரசன்!
பொதுவில் உலகம் பொலிதல் என்றோ?
புகன்ற உரையரசன்!
  
செப்பும் மொழிகள் சீரார் நுாலைச்
செய்த கவியரசன்!
ஒப்பே இன்றி உயர்ந்த கவியால்
ஒளிரும் தமிழரசன்!
  
பாடி யளித்த பாக்கள் யாவும்
பண்டைத் தமிழ்காக்கும்!
கோடிப் புலவர் கூடி மகிழக்
கொஞ்சும் சுவைசேர்க்கும்!
  
தொடரும்....
  
23.04.2015

1 commentaire:

  1. விண்மின் நடுவே வெண்மை நிலவாய்
    மேவி மின்னியவன்!
    மண்மீ[து] எங்கும் வண்ணத் தமிழை
    வளமாய்ப் பின்னியவன்!

    பாவரசர் கண்ணதாசன் அவர்கள்

    RépondreSupprimer