lundi 10 avril 2017

கையறுநிலை

முனைவர் அ. அறிவுநம்பி கையறுநிலை
  
ஏனோ பிரிந்தனையோ? இங்குப் பிறந்ததும்
வீணோ எனமனம் வெந்தனையோ? - வானோரும்
அந்தமிழை நாடினரோ? அ.அறிவு நம்பியே!

எந்தமுளம் தேடுமுனை இங்கு!
  
ஆழ்ந்த உரையெங்கே? அன்பு மனமேங்கே?
சூழ்ந்த புகழெங்கே? துாய்மையுடன் - வாழ்ந்தவுன்
ஆற்றலறம் எங்கே? அருமறிவு நம்பியே!
கூற்றுவனைக் கொண்டதேன் கூறு
  
கம்பன் கவியாய்ந்தாய்! கன்னல் குறளாய்ந்தாய்!
இம்மண் உவக்க எழுத்தீந்தாய்! - நம்மொழி
ஆள அகங்கொண்டாய்! அ.அறிவு நம்பியே!
மீளாப் பிரிவேன் விரைந்து?
  
இளங்கோ இசையுணர்ந்[து] ஈந்த அரும்நுால்
வளங்கோ வகுத்தவழி வார்க்கும்! - விளக்கமினி
யாரிடம் யாம்பெறுவோம்? அ.அறிவு நம்பியே!
ஓரிடம் உன்னிணை ஓது?
  
எழுத இதழூண்டாம்! ஏற்றபணி யுண்டாம்!
தொழுத கலையுண்டாம்! தொன்மை - மொழிண்டாம்!
எல்லாம் உனைத்தேட, இன்னறிவு நம்பியே!
சொல்லாமல் சென்றாய் துணிந்து!

  
ஆழ்ந்த துயருடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

Aucun commentaire:

Enregistrer un commentaire