samedi 6 janvier 2018

வெண்பா மேடை - 59



வெண்பா மேடை - 59

குறட்டாழிசை

குறள் வெண்பாவின் இனமாகக் குறட்டாழிசை அமைகிறது. தாழம்பட்ட ஓசையோடு வருதல்பற்றிக் குறட்டாழிசை  எனப்பட்டது [தாழம் - மந்தம்]

மூன்று வகையான குறட்டாழிசைகள் உள்ளன.

1.
செப்பலோசையில் சிதைந்து, வேற்றுத்தளை கலந்து, குறள் வெண்பாவின் சிதைவாய் வருவன குறட்டாழிசை எனப்படும்.

2.
வெண்செந்துறை போல அடி இரண்டாய் வந்து ஈற்றடி குறைந்து வருவன குறட்டாழிசை எனப்படும்.

3.
அடி இரண்டாய் அளவொத்து விழுமிய பொருளும் ஒழிகிய ஓசையும் இல்லாமல் வெண்செந்துறையில் சிதைந்து வருவன குறட்டாழிசை எனப்படும்.

குறட்டாழிசை - 1

1.
காலை கசந்ததடி! கன்னல் மொழியின்றி
மூளை  நிற்கும் முரண்டு!

2.
மாலை வெறுத்ததடி! மாதே நீயின்றிச்
சோலை வாடும் சுருண்டு!

3.
மார்பு துடிக்குதடி! மானே நீயின்றி
வாழ்வு பெறுமோ வளம்?

4.
சொல்லும் மாறியதேன்? துாயவளே! காத்திருப்புக்
கொல்லும் உயிரைக் குடித்து!

5.
நெஞ்சம் ஏங்குதடி! நேரிழையே! உன்னுடைய


பிஞ்சு  விரல்தந்த பித்து!

6.
ஆசை பெருகுதடி! ஆருயிரே! உன்கொலுசு 
ஓசை ஊட்டும் உணர்வு!

7.
அன்பு சுரக்குதடி! ஆரணங்கே! அமுதுாறும்
இன்பத் தமிழை இசைத்து!  

8.
உள்ளம் உருகுதடி உன்றன் நினைவினிலே!
துள்ளும் கனவுகள் தொடர்ந்து!

9.
இதயம் வெடித்ததடி! என்னவளே நீயின்றி
உதயம் வருமோ உயிர்க்கு?

10.
சிந்தை சிதைந்ததடி! செல்லமே! நீயின்றிக்
கந்தை யாகும் கவி!

மேலுள்ள குறட்பாக்கள்,செப்பலோசை சிதைந்து வேற்றுத்தளை கலந்து, குறள் வெண்பாவின் சிதைவாய் வந்த குறட்டாழிசை ஆகும்.

குறள் வெண்பாவின் சிதைவாய் வந்த குறட்டாழிசை ஒன்றை, விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் குறட்டாழிசையைத்  தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!

அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
06.01.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire