mercredi 7 février 2018

விருத்த மேடை - 17


  
அறுசீர் விருத்தம் - 17
[விளம்+விளம்+மாங்காய்+விளம்+விளம்+ மாங்காய்]
  
இந்திரன் முதலுள சுரர்வைகும்
   ஏழுடன் ஒருதிசை வேழம்போல்
அந்தநெ டுங்கிரி வரவோடும்
   அருகினில் உறுகுல கிரியாகித்
தந்தியின் முகமுள அவுணன்றான்
   சடசட முதிரொலி யுடன்வந்தான்
முந்திய தந்தம துருமாறி
   முறைமுறை நின்றதொர் திறனேபோல்
         [கந்த புராணம் - 1504]
  
விளம்+விளம்+மாங்காய் என்ற வாய்பாட்டில் அனைத்து அரையடிகளும் அமைய வேண்டும். நான்கடிகள் ஓரெதுகை பெற வேண்டும். ஒன்று, நான்காம் சீர்களில் மோனை அமையும். [விளம் வரும் இடங்களில் மாங்காய்ச் சீரும், மாங்காய் வரும் இடங்களில் கருவிளச் சீரும் எங்கோ ஓரிடம் வரும்]
  
கொடுமையை எதிர்த்துநில் [பாரதியின் புதிய ஆத்திசூடி]
  
உயர்வெனும் தாழ்வெனும் வண்ணத்தை
   ஒழித்திட எழுக..நீ! எந்நாளும்
துயர்தரும் மடமையை மண்விட்டுத்
   துரத்திட எழுக..நீ! நெஞ்சத்துள்
மயர்வுறும் மாந்தரை நெறியிட்டு
   மாற்றிட எழுக..நீ! ஏமாற்றிப்
பெயர்பெறும் வாதியைத் தோல்நீக்கிப்
   பிழிந்திட எழுக..நீ புலியோனே!
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
      
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
    
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
07.02.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire