dimanche 11 février 2018

விருத்த மேடை - 20

விருத்த மேடை - 20
  
அறுசீர் விருத்தம் - 20
[வெண்டைளை விருத்தம்] [நேரசை 18 எழுத்துகள், நிரையசை 19 எழுத்துகள்]
  
ஞமலிபோல் வாழேல் [பாரதியின் புதிய ஆத்திசூடி]
  
நாய்போல் நலிந்து நடையில் தளர்ந்து
   நடுங்கிக் கிடக்காதே!
காய்போல் கசந்து கரிபோல் கிடந்து
   கலங்கித் துடிக்காதே!
பேய்போல் அலைந்து பிணிபோல் உழன்று
   பெருமை இழக்காதே!
தாய்போல் இருந்து தமிழ்போல் மணந்து
   தழைக்க மறக்காதே!
  
[நேரசையால் தொடங்கி அடிக்கு 18 எழுத்துகளைப் பெற்று வந்தது]
  
இழிவுறும் போக்கேன்? இளிப்புறும் வாக்கேன்?
இருளுறும் நெஞ்சேனோ?
பழியுறும் போக்கேன்? பயமுறும் நாக்கேன்?
பழுதுறும் பாழேனோ?
அழிவுறும் போக்கேன்? அரிப்புறும் புண்ணேன்?
அவமுறும் தாழ்வேனோ?
கழிவுறும் போக்கேன்? கடுப்புறும் கேடேன்?
கடியுறும் வாழ்வேனோ?
  
[நிரையசையால் தொடங்கி அடிக்கு 19 எழுத்துகளைப் பெற்று வந்தது]
  
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
அடியின் ஈற்றுச்சீர் மாங்காயாகும். வெண்டளை பயின்று வரவேண்டும். அடியின் இறுதிக்கும் அடுத்த அடியின் முதலுக்கும் [வெண்பாபோல்] வெண்டளை கட்டாயமில்லை.
  
நான்கடிகள் ஓரெதுகை பெற வேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமையும்.
  
நேரசையில் தொடங்கும் ஓரடி 18 எழுத்துகளையும், நிரையசையில் தொடங்கும் ஓரடி 19 எழுத்துகளையும் பெற்றிருக்கும். [இப்பாடலில் விளங்காய் வராது]
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
      
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
    
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
10.02.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire