vendredi 2 mars 2018

கலிப்பா மேடை - 11

கலிப்பா மேடை - 11
  
கட்டளைக் கலிப்பா!
  
நெஞ்சுள் நின்றிடும் நேரிழை! பொற்கவி
   நேயன் நெய்திடும் சீரிழை! மெல்லிழைப்
பஞ்சில் பின்னிய பாவையின் பட்டுடல்
   பட்டுத் தீயெனப் பற்றுதே என்னுடல்!
கொஞ்சிக் கூடிடும் கோல நினைவுகள்
   கோடி கோடி குலவிடும்! கூத்திடும்!
மஞ்சள் சிட்டென மாதுளை முத்தென
   வஞ்சி நல்லெழில் விஞ்சி மிளிருதே!
  
வண்ணப் பெண்ணே! மனத்தினைக் கொல்லாதே!
   மணத்தை ஏற்க வரும்நெஞ்சைத் தள்ளாதே!
எண்ணம் யாவும் இருளெனக் கொள்ளாதே!
   இடரில் வாழ்வை இருத்தியே துள்ளாதே!
கண்ணில் நீயே! கருத்திலும் நீயே!என்
   பண்ணில் நீயே! படர்நலம் நீயே!வா!
பெண்ணில் நீயே பிழையிலா நல்லெழில்!
   மண்ணில் என்னை மகிழ்வுறச் செய்கவே!
  
கட்டளைக் கலிப்பா இலக்கணம்
  
எழுத்தெண்ணி எழுதப்படுவதால் இப்பெயர் பெற்றது. [ கட்டளை - அளவு] [கலிப்பா - துள்ளலிசைச்செய்யுள்]
  
எட்டுச் சீர்களைக் கொண்ட நான்கடிகள் ஓரெதுகையில் அமையவேண்டும். ஐந்தாம் சீரில் மோனை வரவேண்டும்.
  
மா + கூவிளம் + கூவிளம் + கூவிளம் என்ற அமைப்பில் அனைத்து அரையடிகளும் அமைய வேண்டும். அனைத்து அரையடிகளிலும் முதல் சீர் குறிலீற்று மா [முதற்சீரின் இறுதி, குறிலாக அல்லது குறில் ஒற்றாக வரும்] [வாழ்க - குறிலீற்றுத் தேமா] [வளர்க - குறிலீற்றுப் புளிமா] [தேனே - நெடிலீற்றுத் தேமா] [அவனே - நெடிலீற்றுப் புளிமா]
  
பாடலின் முதல் அரையடியில் முதல் சீர், குறிலீற்றுத் தேமாவாகவும், தொடர்ந்து வரும் அரையடியின் முதல் சீர், குறிலீற்றுப் புளிமாவாகவும் வரலாம். [ மா வரும் இடத்தில் குறிலீற்றுத் தேமா, குறிலீற்றுப் புளிமா வரலாம் என்பதைக் கருத்தில் கொள்ளவும்]
  
முதலிரு சீர்கள் மாமுன் நேராக வருவது கட்டாயம். 2, 3 ஆம் தளைகள் விளமுன் நேராகவோ, மாமுன் நிரையாகவோ [ இயற்சீர் வெண்டளையாக] வரலாம்.
  
நேரசையில் தொடங்கும் அரையடியின் எழுத்தொண்ணிக்கை 11. நிரையசையால் தொடங்கும் அரையடிக்கு எழுத்தெண்ணிக்கை 12.
  
பாடல் ஏகாரத்தில் முடிய வேண்டும். [மேலுள்ள பாடல்கள் 'மிளிருதே' 'செய்கவே' என ஏகாரத்தில் முடிந்துள்ளதைக் காண்க]
  
விளச்சீர் வரும் இடங்களில் மாங்காய்ச்சீர் அருகி வரும். [விளங்காய் வாராது]
  
செலவு தந்தைக்கொ ராயிரம் சென்றது
தீதெ னக்குப்பல் லாயிரம் சேர்ந்தன!
நலமொ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை
நாற்ப தாயிரம் கோயிலிற் சொல்லுவேன்!
சிலமுன் செய்நல் வினைப்பய னாலுநம்
தேவி பாரதத் தன்னை அருளினும்
அலைவு றுத்துநும் பேரிருள் வீழ்ந்துநான்
அழிந்தி டாதொரு வாறு பிழைத்தே!
[பாரதியார், தன்வரலாறு 29]
  
மேலுள்ள பாடலில் விளம் வரும் இடத்தில் 'தந்தைக்கொ' 'னக்குப்பல்' 'யுங்கண்டி' என மாங்காய்ச்சீர் வந்துள்ளது.
  
முகநுால் குழுமங்களில் இப்பாடலின் இலக்கணத்தை உரைத்தவர்கள், இப்பாடலின் அனைத்து அரையடிகளிலும் முதல் சீர், குறிலீற்று மாச்சீர்தான் வரும் என்பதைச் சொல்லாமல் விடுத்தனர். பயிற்சிபெறும் அன்பர்களும் நெடிலீற்று மா வைத்துப் பிழையாக எழுதியுள்ளனர்.
  
பிற முகநுால்களில் பிழையாக எழுதிய பாடல் அடிகள்
  
கனிவாய்ப் பேசுதல் கற்றவர் தன்மையாம்!
கருத்தாய்ப் பேசுதல் கற்றவர் தன்மையாம்!
  
ஏற்றம் பெற்றவ ரென்கிறோம் நாளெலாம்!
ஏனோ யெம்மிடை இத்தனை இன்னலோ!
  
கனியாய், கருத்தாய், ஏனோ ஆகிய சீர்கள் பிழையாக வந்தவையாகும். இவ்விடங்களில் குறிலீற்று மா வர வேண்டும்.
  
நீங்கள் விரும்பிய பொருளில் கட்டளைக் கலிப்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் கலிவெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
02.03.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire